சிங்கப்பூரில் குறுக்குத் தீவு ரயில்பாதைத் திட்டத்திற்கு சுரங்க ரயில் தடங்களை அமைக்க ஜப்பானிய நிறுவனங்களின் கூட்டு வர்த்தகத்துக்கு $242 மில்லியன் மதிப்புள்ள குத்தகையை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கி உள்ளது.
வருங்கால எம்ஆர்டி நிலையங்களான வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங் லேக் வட்டாரம் ஆகியவற்றை இணைக்க நிலத்தடியில் 40 மீட்டர் ஆழத்தில் அந்தச் சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது.
குறுக்குத் தீவு ரயில் பாதைத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் அது இடம்பெறும்.
இரு வழித்தடமாக அமைக்கப்படும் ஒவ்வொரு சுரங்க ரயில் பாதையும் 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும்.
சுங்கை பாண்டான் கால்வாய், முக்கிய கட்டமைப்புகளான வெஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலை, ஆயர் ராஜா விரைவுச் சாலை ஆகியவற்றின் அடியில் அந்த ரயில் பாதை கட்டப்படும்.
இதற்கான $242 மில்லியன் குத்தகையை நிஷிமட்சு கன்ஸ்ட்ரக்ஷன், ஒகுமுரா கார்ப்பரேஷன் சிங்கப்பூர் பிராஞ்ச் ஆகிய ஜப்பானிய நிறுவனங்களின் கூட்டு வர்த்தகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஜூன் 19) கூறியது.
சுரங்க ரயில் பாதைகளை வடிவமைத்து கட்ட அந்தக் குத்தகை வழங்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
அதற்கான கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

