ஈசூன் அணைக்கட்டுக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதியில் அண்மையில் முதலை ஒன்று தென்பட்டதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்த இடத்துக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று அது பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜூலை 8ஆம் தேதியன்று சிங்கப்பூர் வைல்டுலைஃப் சைட்டிங்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. ஈசூன் அணைக்கட்டுக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதியில் முதலை ஒன்று நீந்திக்கொண்டிருந்ததை அதில் பார்க்க முடிந்தது.
ஜூலை 9ஆம் தேதி நிலவரப்படி அந்தக் காணொளியை ஏறத்தாழ 195,000 பேர் பார்த்துள்ளனர், 1,200க்கும் மேற்பட்டோர் அக்காணொளியைப் பகிர்ந்துள்ளனர்.
நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணிப்பதாகவும் அந்தப் பகுதியைச் சுற்றி எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படுவதாகவும் தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாக குழுமத் தலைவர் ஹாவ் சூன் பெங் கூறினார்.
அந்த அணைக்கட்டு சுங்கை சிலேத்தார் அருகில் உள்ளது. அது லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்துக்கும் ஜோகூர் நீரிணைக்கும் இடையே உள்ளது.
அவ்விடத்துக்குப் படகு வலித்தல் ஆர்வலர்கள் பலர் செல்வதுண்டு.

