வறட்சி காலம், பருவமழைக் காலம் ஆகியவற்றை தாக்குப்பிடிக்கக்கூடியதுடன் ஆசியாவில் வேகமாகப் பரவி வரும் நீரிழிவு நோய்க்கு எதிராக ஆரோக்கியமான அரிசி வகைகளை உருவாக்குவது குறித்தும் பிலிப்பீன்சுடன் இணைந்து செயல்படுவதில் சிங்கப்பூர் ஆர்வமாக உள்ளது.
பிலிப்பீன்சுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன், தமது பயணத்தின் முடிவில் அனைத்துலக அரிசி ஆய்வு நிலையத்தில் உரையாற்றினார். அப்பொழுது, உயிர் பன்முகத்தன்மை, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க பல வழிகளில் சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதில் பருவநிலை மாற்றத்தால் கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் அரிசி உற்பத்தியும் அடங்கும் என அவர் கூறினார். வறட்சி, வெப்ப அலை, கடல்நீரிலிருந்து நாடுகளுக்குள் வரும் உப்புநீர் ஆகியவை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அரிசி உற்பத்தியாளர்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவித்தார் அதிபர் தர்மன்.
“அரிசி, ஆசியா உள்ளிட்ட உலகின் பெரும்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய உணவு.
“ஆனால், கண்கூடாகத் தெரிவது என்னவென்றால், அரிசி உற்பத்தி கடும் அச்றுத்தலை எதிர்நோக்கி உள்ளது,” என்று அவர் சொன்னார்.