வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்து வந்த தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூரின் நிர்மாணத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பாராட்டியுள்ளார்.
தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) உரையாற்றிய திருமதி டியோ, சிங்கப்பூரில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஒரே தமிழ் நாளிதழைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டார்.
மிகக் குறைவான செய்தித்தாள்களே 90 ஆண்டுகளைக் கடந்து வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் தொன்மையான மொழியான தமிழில் செய்திகளை வழங்கும் தமிழ் முரசு கடந்து வந்த பாதையைத் திருமதி டியோ விவரித்தார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்ட அமைச்சர் டியோ, தமிழ் மட்டும் தெரிந்தோர்க்கு, முக்கியமான பொதுச் சுகாதாரத் தகவல்களைத் தமிழ் முரசு உடனுக்குடன் வழங்கியதாகக் குறிப்பிட்டார். அத்தகையோரில் வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர் என்றார் அவர்.
இளம் வாக்காளர்களின் கனவுகளைப் பிரதிபலிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் குறுங்காணொளிகளையும் தமிழ் முரசு வெளியிட்டதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை தேர்தலைப் பற்றி முதன்முறை வாக்காளர்களுக்கு விளக்க உதவின என்றார்.

