பேங்காக்: ஒராண்டுக்குமுன் தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் இருக்கும் கோவில் ஒன்றின் சுவரில் வண்ணத் தெளிப்பானைக் கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் ஆர்ப்பாட்டகாரர் ஒருவர் கிறுக்கினார்.
அது குறித்து எழுதிய இரண்டு செய்தியாளர்களைக் கைது செய்ததாக அந்நாட்டுக் காவல்துறையினர் பிப்ரவரி 13ஆம் தேதி தெரிவித்தனர்.
இணையச் செய்தி நிறுவனமான ‘பிரச்சதை’யின் நிருபர் நட்டாபோல் மெக்சோபோன், தன்னுரிமை செய்தி புகைப்படக் கலைஞர் நட்டாஃபோன் ஃபான்போங்சனன் ஆகிய இருவரும் பிப்ரவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
வரலாற்றுத் தளம் ஒன்றை சேதப்படுத்துவதற்கும் நாசவேலையில் ஈடுபடுவதற்கும் உடந்தையாக இருந்ததாக அவ்விரு செய்தியாளர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டதாக அவ்விருவரைப் பிரநிதிக்கும் மனித உரிமைகளுக்கான தாய்லாந்து வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
“அவ்விருவரும் அப்பகுதிக்குச் செய்தி சேகரிக்க மட்டுமே சென்றனர். அந்த ஆர்பாட்டகாரரின் செய்கை குறித்து அவர்கள் முன்கூட்டியே அறியவில்லை. அவர்கள் செய்தியாளர்களாக மட்டுமே அச்செய்தியை சேகரித்தனர்,” என ‘பிரச்சதை’ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் திவாரிட் கூறினார்.