அலங்கரிக்கப்பட்ட காவடிகள், நிரம்பிய பால்குடங்கள், கடுமையான விரதம், களைப்பைப் போக்க பக்திப்பாடல்கள், பரவசம் பொங்கும் நடனங்கள் என்று இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழாவில் பல்வேறு அம்சங்கள் ஒருசேர பக்தியைப் பிரதிபலித்தன.
தைப்பூசத் திருவிழாவில் திரளாகப் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு வழிபாடு குறித்த தங்களது கருத்துகள், அக்கறைகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
ஊர்வலப் பாதை
கூட்டம், காத்திருக்கும் நேரம், ஏற்பாடுகள் குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தைப்பூச நாளன்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து பால்குடங்களையும் காவடிகளையும் ஏந்தியபடி அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் தமிழ்முரசிடம் தங்கள் மனவோட்டத்தைப் பகிர்ந்தனர்.
தன் மாமா செல்வராஜுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரின் சக்கர நாற்காலியை இயக்க உதவுவதற்காக முதன்முறையாக தைப்பூசத்துக்கு வந்திருந்தார் கிரண். இவர்கள் இருவரும், “கூட்டமாக இருந்தாலும் நிர்வாகத்தினர் மிகவும் நன்றாக ஏற்பாடு செய்திருந்தார்கள்,” என்று கூறினர்.
வரிசைகளில் நெறிமுறைகளைப் பக்தர்களும், அங்குக் கூட்டத்தைக் கட்டுபடுத்துவோரும் சீராகப் பின்பற்றியிருக்கலாம் என்ற கருத்து தைப்பூச ஊர்வலத்தில் பரவலாக எதிரொலித்ததை உணர முடிந்தது.
“ஶ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தை நெருங்கும்போது காவடிகளுக்கும் பால்குடங்களுக்கும் தனித்தனி வரிசைகள் இருந்தாலும் அவற்றை யாருமே சரியாகப் பின்பற்றவில்லை. இதனால், நெரிசல் அதிகமானதால் பக்தர்கள் அமைதியிழந்தனர். முக்கியமாக சிறுபிள்ளைகளை வைத்திருப்பவர்களும் வயதானவர்களும் சிரமப்பட்டார்கள்,” என்று கூறினார் மருந்தகத் துறையில் பணியாற்றும் சரிதா ராஜாராமன், 40.
நீண்ட காத்திருப்பு
தைப்பூச நாளன்று காவடியைச் செலுத்த நெடுநேரம் கடும் வெயிலில் காத்திருக்கவேண்டியிருந்தது என்று பக்தர்கள் சிலர் கருத்துரைத்தனர். வெயிலின் கடுமையைத் தணிக்க சாலையில் தண்ணீரைத் தெளித்தால் பாதையில் சூடு தணிந்து, பக்தர்கள் நடந்து செல்லப் பேருதவியாக இருக்கும் என்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியிருந்தன.
“நாங்கள் பின்தொடர்ந்த காவடி காலை 6.30 மணிக்கே ஶ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தை நெருங்கிவிட்டது. ஆனால் காவடியைச் செலுத்த கிட்டத்தட்ட காலை 10 மணி ஆகிவிட்டது,” என்றார் பஜனைப் பாடல் குழுவைச் சேர்ந்த குமரன்.
தொடர்புடைய செய்திகள்
தனக்குத் தெரிந்த ஒருவருக்கு நெடுநேரம் காத்திருந்ததால் படபடப்பு ஏற்பட்டது என்றார் இவர்.
“அவர் இதய நோயாளி என்பதால் கூட்டத்தைக் கடந்து செல்ல ஏதேனும் உதவி செய்யமுடியுமா எனத் தொண்டூழியரிடம் கேட்டார். எனினும் பலனில்லை,” என்றார் குமரன்.
காவடிகளுக்கு ஏற்கெனவே வரிசை எண் இருக்கும்போது, அதற்கான ரசீதையும் காட்டச் சொல்வது தேவையற்ற ஒன்று எனவும், பல மணிநேரமாகக் காவடி தூக்கி வரும் பக்தர்கள் அந்நேரத்தில் ரசீதைத் தேடுவது சாத்தியமாகுமா என்றும் பக்தர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.
இதற்கிடையே இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் சிலர் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தன் மகன்களுடன் கோயிலுக்கு வந்திருந்த கணேசன், “பால்குடங்கள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தன,” என்றார்.
குடும்பங்கள், பெண்கள், மூத்தோர் எனத் தனித்தனியான வரிசைகள் அமைக்கப்பட்டிருந்ததை அவர் பாராட்டினார். பக்தர்கள் பலரும் இக்கருத்தை ஆமோதித்தனர்.
தண்ணீர், உணவு, பானங்கள் என வழிநெடுகிலும் தொண்டூழியர்கள் உபசரித்த பாங்கு பக்தர்களுக்குப் பெரும் இளைப்பாறுதலை நல்கியது.
இதுகுறித்துப் பேசிய தைப்பூச முதலுதவிக் குழுவின் தாதியர் அருள் கோவிந்தசாமி, 52, “அதிக வெப்பத்தினால் இரண்டு பேருக்கு உடல்நலம் சற்றுக் குன்றியது,” என்றார். பாதிக்கப்பட்டவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
வரும் ஆண்டுகளில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூட்டத்தைச் சமாளித்தல், தெளிவான பதாகைகள் வைத்தல், கூடுதல் வரிசைகள், குறிப்பாகக் கூட்டத்தை நெறிப்படுத்த கூடுதலானோரை அமர்த்தி, வருவோருக்குத் தெளிவான குறிப்புகளைக் கூறித் தயார்ப்படுத்தினால் பக்தர்களின் பயணம் எளிதாகும் என்று விழாவில் பங்கேற்ற பலர் கருத்துரைத்தனர்.