ஊட்டச்சத்து உணவு உட்கொண்ட மூவருக்கு மோசமான பின்விளைவுகள்

ஊட்டச்சத்து உணவு உட்கொண்ட மூவருக்கு மோசமான பின்விளைவுகள்

1 mins read
42547362-6eb8-4394-b4ff-b9775f57465e
சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முட்டி வலி, எடைக் குறைப்பு ஆகியவற்றுக்கான, தடை செய்யப்பட்டுள்ள அல்லது மிகவும் வலுவான சக்தி கொண்ட மருந்துப் பொருள்கள் உள்ள ஊட்டச்சத்து உணவை உட்கொண்ட மூவர் மோசமான பின்விளைவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்கள் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற பின்விளைவுகளைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊட்டச்சத்து மருந்து வகைகளான எபாட் அங்கின் துலாங், டியான்மா டு‌ஷொங் ‌ஷுஜிங் வான், ஐஎம் எஸ்ஓ ஏஎம், ஐஎம் டிஓஎக்ஸ் பிஎம் (IM SO am, IM TOX pm) ஆகியவற்றை மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் புதன்கிழமை (மார்ச் 18) பொதுமக்களை எச்சரித்தது.

“அபாயம் ஏற்படுத்தக்கூடிய மருந்துப் பொருள்கள் அவற்றில் உள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் நடத்திய சோதனைகளில் தெரிய வந்துள்ளது,” என்று ஆணையம் செய்தி அறிக்கையில் தெரிவித்தது. தடை செய்யப்பட்டுள்ள சிபுட்ராமின் (sibutramine) போன்ற மருந்துப் பொருள்கள் அவற்றில் அடங்கும்.

‌சிங்கப்பூரில் ஷாப்பி, லஸாடா, கரோசல் போன்ற மின்வர்த்தகக் கடைகள், தற்காலிகக் கூடாரக் கடைகள் (makeshift stalls) போன்ற பல்வேறு இடங்களில் இந்த ஊட்டச்சத்து உணவு வகைகள் விற்கப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

“இவற்றை விற்கும் பதிவுகளை அகற்றுவதற்காக சுகாதார அறிவியல் ஆணையம் மின்வர்த்தகத் தளங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இவற்றை விற்பவர்கள் மீது விசாரணை தொடர்கிறது,” என்று ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்