சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மீதான குற்றவியல் வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், முதல் பகுதி விசாரணை செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் ஆகஸ்ட் 12ஆம் தேதி தெரிவித்தது.
தற்காப்புத் தரப்பின் கோரிக்கைக்கு ஏற்ப விசாரணை தொடங்கும் தேதி மாற்றப்பட்டதாக, ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகப் பேச்சாளர் கூறினார்.
62 வயதாகும் ஈஸ்வரன் மீது மொத்தம் 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு, $166,000 ஊழல் தொடர்பானவை.
மேலும் 32 குற்றச்சாட்டுகள், அரசாங்கப் பணியில் இருந்தபோது $237,000க்கும் அதிகமான மதிப்பிலான பொருள்களைப் பெற்றுக்கொண்டது தொடர்பானவை. ஒரு குற்றச்சாட்டு, நீதிமன்றம் அதன் பணியைச் செய்யவிடாமல் இடையூறு செய்தது தொடர்பானது.
ஹோட்டல், சொத்துச் சந்தைப் பெரும் பணக்காரர் ஓங் பெங் செங், லாம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் டேவிட் லாம் ஆகியோரிடம் பெற்ற அன்பளிப்புகள் தொடர்பில் அந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.