வெள்ளிக்கிழமையிலிருந்து (ஜனவரி 24) ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை தகுதிபெறுவோர் குறிப்பிட்ட மருந்தகங்களில் மேம்படுத்தப்பட்ட நோவவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜேஎன்.1 (JN.1) நோவவேக்ஸ் தடுப்பூசி, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சு வியாழக்கிழமையன்று (ஜனவரி 23) அறிக்கை மூலம் தெரிவித்தது. இந்த வகை தடுப்பூசிக்குச் சொந்தமான நிறுவனம், ஏற்கெனவே தயாரித்தவை விநியோகிக்கப்பட்ட பிறகு அதற்கான தயாரிப்பை நிறுத்தியிருப்பது அதற்குக் காரணம்.
சிங்கப்பூரில் 12 வயது அல்லது அதையும் தாண்டியோர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முடியாதோர் புரத சத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நோவவேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

