சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (ஏப்ரல் 17) நாடாளுமன்றத்தில் பேசியபோது அது குறித்து திரு விக்ரம் பேசினார்.
" தமிழ் மாணவர்கள் குறைவாகவே உள்ளதால், மற்ற தாய்மொழி ஆசிரியர்களை விட தமிழ்மொழி ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். தமிழ் மாணவர்கள் குறைவாகவே உள்ள போதிலும் பள்ளிகளில் வெவ்வேறு வயதுகளில் வெவ்வேறு பாடத் தொகுப்புகளைக் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் தேவை பலதரப்பட்டவையாகவே உள்ளது என்று திரு விக்ரம் குறிப்பிட்டார்.
" ஆசிரியர் பற்றாக்குறையால் சில பள்ளிகளில் வெவ்வேறு பாடத் தொகுப்புகளை எடுக்கும் மாணவர்கள் வெவ்வேறு பாடத் தொகுப்பின் அடிப்படையிலான வகுப்புகளிலிருந்து வந்த போதிலும் தமிழ்மொழி வகுப்புகளுக்கு ஒன்றிணைக்கப்படுகின்றனர்."
" இது பொதுக் கற்றலை சிரமமாக்குகிறது. கல்வி அமைச்சு இப்பிரச்சினையைக் கையாள ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கிறதா என்பதை அறிவது பயன்மிக்கதாக இருக்கும். அரசாங்கப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகளிலும் தமிழ்மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் முக்கியமானது," என்றார் திரு விக்ரம்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவும் உதவியும் செய்து வருவதற்கு தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் கூறினார் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர்.

