பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாத இறுதியில் 31 டிகிரி செல்சியசுக்கு கீழே இருந்த அன்றாட அதிகபட்ச வெப்பநிலை, பிப்ரவரி மாதத்தில் 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடையில் உயரும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படுவதுடன் எப்போதாவது காற்றடிக்கும்.
பிப்ரவரி முற்பகுதியில் மழை நாட்கள் குறைவாக இருக்கும். சில நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவை சிறிது நேர மழையாகவே இருக்கும்.
ஜனவரி 17 முதல் ஜனவரி 19 வரை அடைமழையுடன் ஜனவரி மாதம் பொதுவாக குளிர்ச்சியான காலமாக இருந்தபோதிலும், மாதத்தின் பிற்பகுதியில் சராசரிக்கும் குறைவான மழையே பதிவு செய்யப்பட்டுள்ளது.
செம்பவாங் வட்டாரத்தில், சராசரியைக் காட்டிலும் கிட்டத்தட்ட 84 விழுக்காடு மழை குறைந்தது.
தற்போதுள்ள வடகிழக்கு பருவக்காற்று நிலைமை பிப்ரவரி முதல் பாதியில் தொடரக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.