பிப்ரவரி பிற்பாதியில் சில நாள்களில் மிதமானதுமுதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் கையில் குடையுடன் வெளியே செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) வெளியிட்ட அடுத்த இரு வாரங்களுக்கான வானிலை அறிக்கையில், முதல் சில நாள்களில் பிற்பகலிலும் மாலையிலும் மழை பெய்யக்கூடும் என முன்னுரைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, வானிலை ஓரளவுக்கு வறண்ட நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒருசில நாள்களில் பிற்பகலில் ஆங்காங்கே குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தற்போது நிலவிவரும் வடகிழக்குப் பருவக்காற்றுச் சூழல் தொடரும் வேளையில், காற்று முக்கியமாக வடமேற்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்கு, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி அளவில் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். ஒருசில நாள்களில் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும்.

