உட்லண்ட்சில் நான்கு நாள்களில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகள் குறித்து காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளோக் 155 உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் இருக்கும் வெற்றிடத்திலும் வீடமைப்பு வளர்ச்சி கழக புளோக்கிற்கு அருகேயும் இத்தீச்சம்பவங்கள் நடந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மார்ச் 10 ஆம் தேதி சின் மின் நாளிதழின் செய்தியாளர் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்து உருகிய குப்பைத் தொட்டிகள், சாம்பல் படிந்த சுவர்கள் ஆகியவற்றை காண முடிந்ததாகக் கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்புவாசி ஒருவர், தீச்சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தது விசித்திரமாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினரிடையே ஒருவித பதற்றம் நிலவுவதாகவும் கூறியதாக சின் மின் தெரிவித்தது.
மார்ச் 7 ஆம் தேதி காலை 6.30 மணிக்கும், மார்ச் 8 ஆம் தேதி காலை 6.55 மணிக்கும், மார்ச் 10ஆம் தேதி காலை 9.40 மணியளவிலும் அத்தீவிபத்துகள் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
இச்சம்பவங்களில் யாரும் காயமடையவில்லை எனக் கூறிய குடிமைத் தற்காப்புப் படை, தீயை அணைக்க பொதுமக்கள் உதவியதாகவும் குறிப்பிட்டது.