அனைத்துலக அளவில் பேரளவில் கவனம் பெற்றுள்ள ‘உலக நீர் விளையாட்டுப் போட்டி’ சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் வியாழக்கிழமை (ஜூலை 10ஆம்) தேதி இப்போட்டியை தொடங்கிவைத்தார். விளையாட்டு உலக வரலாற்றில் ‘உலக நீர் விளையாட்டுப் போட்டி’யை நடத்தும் முதல் தென்கிழக்காசிய நாடு சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விளையாட்டு போட்டிகள் ஜூலை 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதிவரை நடைபெறுகிறது. பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் ஊடகப் பிரிவினர் என அனைத்துலக அளவில் ஏறத்தாழ 40,000 பேர் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க விழாவை அறிவிப்பதற்கு முன்பு ஆற்றிய உரையில், சிங்கப்பூர் அதன் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், உலகளாவிய இப்போட்டிகளை நடத்துவது நாட்டுக்குச் சிறப்புத் தருணம் என்று குறிபிட்டார் திரு தர்மன்.
நீச்சல், முக்குளிப்பு நீரடி நீச்சல்உட்பட 6 பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியின் வெற்றியாளர்களுக்கு வழங்க 77க்கும் அதிகமான பதக்கங்கள் உள்ளன. போட்டியில் கிட்டத்தட்ட 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர், “போட்டியிட்டாலும் கூட, உலகில் அதிகளவில் பிரிவினைகள் பெருகிவரும் நிலையிலும், நாம் ஒன்றாக இணைந்து ஒருங்கிணைந்து திகழ முடியும் என்பதை விளையாட்டுப் போட்டிகள் நமக்கு நினைவூட்டுகின்றன,” என்றும் கூறினார்.
மேலும், இதன்வழி பொதுவான மனிதநேயத்தை நாம் மெய்ப்பிக்க முடியும்” என்று மேலும் தெரிவித்தார் திரு தர்மன்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி ரஷ்ய நகரமான கஸானில் நடைபெறவிருந்ததும், பிறகு ரஷ்யா-உக்ரைன் படையெடுப்பின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு தற்போது சிங்கப்பூரில் நடைபெறுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.