தமிழ் முரசின் 90வது ஆண்டு, வளர்ச்சி நிறைந்த ஆண்டு.
தொழில்நுட்பத்தில் பெரும்பாய்ச்சலெடுத்தது. முரசின் உருவாக்கத்திலும் அதன் வெளியீடுகளிலும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்குநாள் மேம்பாடு காண்கிறது.
இளையர்களின் கவனம் பெற்று, தொடர்ச்சியை உறுதிசெய்வதில் முழுமூச்சுடன் இறங்கியது. ‘இளைய தலைமுறை’ பிரிவுத் தொடக்கமே காற்று வேகம். ஓராண்டுக்குள் எட்டுத் திக்கையும் தொட்டு நிற்கிறது.
சமூகப் பிணைப்பு இன்னும் வலுவடைந்தது.
6.7.2025ல் தொடங்கிய தமிழ் முரசின் 90வது ஆண்டுக் கொண்டாட்டம் 4.7.2026 சனிக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டுடன் சிறப்பாக நிறைவுகண்டது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து தமிழ் முரசு, சிண்டா, நற்பணிப் பேரவை நடத்திய சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவான ‘இணை’ குழுவின் ஆதரவுடன் நடைபெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். படத்தில் மாநாட்டை நடத்திய இளையர்களும் தமிழ் முரசு குழுவினரும். படம்: பே.கார்த்திகேயன்
நூற்றாண்டை நோக்கிய தமிழ் முரசின் வெற்றிப் பயணம், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் சாதனை!
90வது ஆண்டுநிறைவு, மகத்தான தொடக்கம்
தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவைச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் 6.7.2025ஆம் நாளன்று ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் கொண்டாடியது. அதிபர் தர்மன் சண்முகரத்னம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மொழி, இலக்கிய, சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், மாணவர்கள், இளையர்கள், வாசகர்கள் எனப் பல தரப்பினரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்து வந்த தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூரின் நிர்மாணத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.
தமிழ்ச் சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிப்பதற்கு, தமிழ் முரசுக்கு ஆதரவு நல்குவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் உறுதியளித்தார்.
தமிழ் முரசு நகரும் கண்காட்சி
முரசின் இளைய தலைமுறை
தமிழ் முரசின் இளையர் தளமான ‘இளைய தலைமுறை’ 2025 செப்டம்பர் 28ஆம் தேதி ஒன்பீப்பள்.எஸ்ஜி (OnePeople.sg) அமைப்புடன் இணைந்து இந்திய இளையர்களுக்காக ‘இன உறவுகள்: எதிர்வரும் போக்குகளும் இளையர் தலைமைத்துவமும்’ என்ற கலந்துரையாடலை நடத்தியது. பிப்ரவரி மாதத்தில் நிறுவப்பட்ட அத்தளம் அன்றைய நாள் அதிகாரபூர்வ தொடக்கம் கண்டது.
சமூக ஊடகங்களில் செயல்படும் அத்தளம், இளையர்களிடமும் பெரியவர்களிடமும் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரின் தமிழ், இந்திய இளையர்கள் தங்கள் எண்ணங்கள், கருத்துகள், பார்வைகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.
தப்லா! வார இதழின் இணையத்தளம்
தமிழ் முரசின்கீழ் இயங்கும் ஆங்கில ஊடகமான தப்லா! வார இதழின் இணையத்தளம் 2025 நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்டப்பட்டது. இதழின் புதிய வடிவமும் அறிமுகமானது. நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகக் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
புதிய இணையத்தளம் மூலமாக இந்தியச் சமூகத்துடன் வலுவான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள தப்லா! இலக்கு கொண்டுள்ளது.
முரசின் இளமைத் துடிப்பு ‘முரசு 360’
தமிழ்மொழி விழா 2026ன் நிறைவு நிகழ்ச்சியாக அரங்கேறியது ‘முரசு 360’.
விழாவில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளின் முழுமையான 360 பாகைக் கோணப் பார்வையை வழங்கினர் தமிழ் முரசின் 15 இளம் மாணவச் செய்தியாளர்கள்.
தமிழ்மொழி விழாவின் உற்சாகத்தையும் படைப்பாற்றலையும் மொத்தமாகக் கண்முன் நிறுத்திய இளையர்களின் ஆர்வத்தையும் துடிப்பையும் அனைவரும் பாராட்டினர்.
டெசன்சன் ரோட்டில் உள்ள ‘சிவில் சர்விஸ் கிளப்’ அரங்கத்தில் இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
ஆடல் பாடலுடன் கலந்துரையாடல்
தமிழ் முரசின் ‘இளைய தலைமுறை’யும் ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக் குழுவினரும் இணைந்து நடத்திய ‘ஆரா 10/10’ (Aura 10/10) நிகழ்ச்சியில் இளையர்கள் மனம் திறந்து பேசினர், மனமகிழ்ந்து பாடி ஆடினர்.
இவ்வாண்டு மே 23ஆம் தேதி எஸ்பிஎச் மீடியா அரங்கில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் 18 முதல் 25 வயது வரையிலான இளையர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

