இளையர்களை தொண்டூழியச் சேவையில் ஊக்குவிக்க இளையர்களே ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 5) ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ‘தெமாசெக் ஷாப்ஹவுஸ்’ பாரம்பரியக் கட்டடத்தில் நடைபெற்றதுஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராகக் கலந்துகொண்டு தொண்டூழியத்தில் செயல்பட்டுவரும் பல இளையோர்களையும் அவர்களின் தனிப்பட்ட தன்னார்வலர் குழுக்களையும் பாராட்டி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியின் அங்கமாக நடந்த கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டு இளைஞர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அதற்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் பற்றியும் கருத்துரைத்தார்.
இரட்சண்ய சேனை, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இளையர்களின் தொண்டூழியக் குழுக்கள் பற்பல நடவடிக்கைகளை சமுதாயத்தில் ஏற்பாடு செய்துவருகின்றன.
வசதி குறைந்த, தனிமைப்படுத்தப்பட்ட சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் முதல் முதியோர்களுக்கான செயல்பாடுகளும், வெளிநாட்டு ஊழியர்களின் நலனை மனதில்கொண்டு அவர்களுக்கான அங்கங்களையும் உள்ளடக்கி அக்குழுக்கள் தீவெங்கும் நற்சேவையாற்றி வருகின்றன.
குடிமக்களின் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் அரசாங்கத்தின் ஆதரவுடன் தெமாசெக் அறக்கட்டளையும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த முயற்சிகளுக்கு நிதி உதவி வழங்கிவருகிறது.
‘ஃபெஸ்டிவல் ஆஃப் டீட்ஸ் பை கிட்ஸ்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்வில் இளையர்களே வழிநடத்தும் 11 தன்னார்வலர் குழுக்கள் கௌரவிக்கப்பட்டன.
சிறுவயதில் ஆர்வத்துடன் தொடங்கப்படும் இத்தகைய நல்ல முயற்சிகள் பள்ளிப் படிப்பிற்குப் பிறகும் தொய்வின்றித் தொடர,’நெட்வொர்க்ஸ் ஆஃப் கிட்ஸ் பை கிட்ஸ்’ என்ற புதிய தளம் ஒன்றும் இந்த விழாவில் ஏற்பாட்டாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதன்வழியாக அடுத்த ஆண்டு,150 இளையர்களை ஒன்றுதிரட்டி வழிகாட்டுதலுடன் பயிற்சிகள் வழங்கி, ஒருங்கிணைந்து தொண்டாற்ற வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ப நடவடிக்கைகள்
பங்கேற்ற குழுக்களில் முதியோருக்கும் வசதி குறைந்த சிறுவர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது, மாயாஜால வித்தைகள் வகுப்பு போன்று பலவற்றை ஏற்பாடு செய்த குழுக்களும் அடங்கும்.
ஹுவா சோங் கல்விக் கழகத்தின் மாணவர்கள் பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்த வெளிநாட்டு ஊழியர்களை ஒன்றிணைக்கும் பணியை, ‘பிராஜெக்ட் இன்டிகிரேட்’ என்ற குழு இன்றளவும் செய்து வருகிறது. ஊழியர்களை சிங்கப்பூரின் பாரம்பரிய பகுதிகளுக்கு சுற்றூலா அழைத்துச் செல்வதும் அதில் ஒன்று.

