இர்ஷாத் முஹம்மது
கொரோனா கொள்ளைநோயின் கோரமான கரங்களில் மூச்சுவிடத் திணறும் இந்தியாவுக்கு உயிர்வாயு அளித்து முதலுதவி செய்துள்ளது சிங்கப்பூர்.
காலத்தில் சிங்கப்பூர் செய்த உதவி சிறியதென்றாலும் அதை ஞாலத்தைவிடப் பெரியதாகக் கருதிப் போற்றுகிறது இந்தியா.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவு இந்த இக்கட்டான காலத்தில் மேலும் சிறப்படைந்துள்ளது என்றார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன்.
“கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல பொருட்களும் மருத்துவ வசதிகளும் இந்தியாவிற்குப் பெருமளவில் தேவைப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து அவற்றை ஒருமுகப்படுத்தி அனுப்பி வைக்கமுடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்ற அவர் அதுகுறித்து விவரித்தார்.
உயிர்வாயுக் கொள்கலன்கள், உயிர்வாயு செறிவூட்டிகள், ஆக்ஸிமீட்டர், சிலிண்டர் வால்வ், ஃப்லோமீட்டர் வால்வ், வென்டிலேட்டர்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விநியோகிப்பாளர்களை அடையாளம் காண சிங்கப்பூர் அரசாங்கம் ஆதரவு நல்கியது.
கிருமிப் பரவலைச் சமாளிக்க சில மாநில அரசுகளும் இந்திய நிறுவனங்களும் கோரிய பொருட்களைக் கொள்முதல் செய்ய பல நாடுகளையும் தொடர்புகொண்டோம். இதில் வர்த்தக, தளவாட மையமாக விளங்கும் சிங்கப்பூரின் அனுபவம் மிகவும் கைகொடுத்தது.
ஆஸ்திரேலியா, மற்ற ஆசிய நாடுகளிலிருந்து வாங்கிய பொருட்களை சிங்கப்பூரிலிருந்து இந்திய ஆகாயப்படை விமானங்களிலும் கடற்படை கப்பல்களிலும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன.
தெமாசெக் அறநிறுவனம் போன்ற சிங்கப்பூரின் அரசு தொடர்புடைய நிறுவனங்களும் டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபை, லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் சில பொருட்களை நன்கொடையாக வழங்கின.
இவ்வாறு சிங்கப்பூர் அரசாங்கம் முதல் தனியார் அமைப்புகள், தனி மனிதர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து உதவி வருவதாக நன்றியுடன் குறிப்பிட்டார் திரு குமரன்.
தொடக்கத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தற்காப்பு அமைச்சர்களும் தொடர்புகொண்டு பரஸ்பர உதவிகள் குறித்துப் பேசினர். சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ச்சியொன்றில் சந்தித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பொருட்கள் வாங்கும் முயற்சிகள் குறித்து விசாரித்தார்.இவ்வாறு சிங்கப்பூர் அமைச்சர்கள் இந்தியாவின் தேவைகளைக் கேட்ட றிந்து உதவுவது பற்றிக் குறிப்பிட்ட திரு குமரன், சிங்கப்பூரிலுள்ள இந்திய சமூக அமைப்புகளின் உதவி யையும் பட்டியலிட்டார்.
சிலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பிரதமர் குடிமக்கள் உதவி, அவசரகால நிவாரண நிதிக்கும் நேரடியாக அனுப்பி உள்ளனர் என்பதையும் அவர் பகிர்ந்தார்.
சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களும் மருத்துவ சாதனங்களும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் பெறப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கொவிட்-19 நிவாரணப் பொருட்களை ஒருமுகப்படுத்தும் பொறுப்பை இச்சங்கம் ஏற்றுள்ளது. ‘எச்எல்எல் லைஃப்கேர்’ எனும் இந்திய சுகாதார அமைச்சின்கீழ் இயங்கும் நிறுவனம் அச்சங்கத்திடம் அந்தப் பொருட்களைப் பெற்று இந்தியா முழுதும் விநியோகிக்கிறது. இலவசமாக விநியோகிப்பதற்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க இந்திய அரசாங்கம் போக்குவரத்துத் தேவைகளை செய்துகொடுக்கிறது.
அண்மைய வாரங்களில் சில அதிருப்தி தரும் சம்பவங்கள் ஏற்பட்டிருந்தாலும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு வலுவாகவே உள்ளதைச் சுட்டினார் திரு குமரன்.
சிங்கப்பூரில் பரவிவரும் பி1617 உருமாறிய கொவிட்-19 கிருமி இந்தியாவிலிருந்து வந்துள்ளது என்ற செய்தி வெளியானதை அடுத்து சிங்கப்பூரில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான இன வாதச் செயல்கள் அதிருப்தி ஏற்படுத்திய சம்பவங்களில் அடங்கும்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூரில் புதிய வகைக் கிருமி பரவி வருவதாகவும் சிறுவர்களை அவை தாக்குவதாகவும் அதனால் அதன் பரவலைத் தடுக்க சிங்கப்பூருடனான விமானச் சேவைகளை நிறுத்துமாறும் பதிவு செய்த சமூக ஊடகக் கருத்தும் இருநாட்டு உறவுகளின் வலிமையைச் சோதித்தன.
சென்ற ஆண்டு கொவிட்-19 சிங்கப்பூரைப் பெரிதும் பாதித்த தருணத்தில் இந்தியா அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது.
பல நாடுகள் நோய்ப் பரவலால் எல்லைகளை மூடியதுடன் ஏற்றுமதியையும் முடக்கிய நிலையில் இந்தியா தொடர்ந்து உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்தது.
இந்த இக்கட்டான காலகட்டத்திலும் இருநாட்டு வர்த்தகம் சீராகவும் வலுவாகவும் உள்ளது.
இந்தியாவின் முதலீட்டாளர்களில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தப் பொருளியல் ஆண்டில் இருநாட்டு வர்த்தகம் 19 பில்லியன் அமெரிக்க டாலர். 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான காலத்தில் இது 23 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
“மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் வலுப்பெற்று வரும் இந்த சிறப்பான வர்த்தக உறவு, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தேவை என்பதையும் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு வழங்குவதைத் தொடரவேண்டும் என்பதையும் பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிட்டார் திரு குமரன்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான நட்புறவு வர்த்தக, அரசதந்திர உறவுகளுக்கும் அப்பாற்பட்டு மனிதநேய உறவுகளாலும் பின்னிப்பிணைந்துள்ளது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் நோய்ப் பரவல் தலைதூக்கியபோது
இந்தியா உதவியது. இப்போது தனக்கு உதவி தேவையென்று இந்தியா குரல் கொடுத்த உடனேயே முதலுதவிகளில் இறங்கியது சிங்கப்பூர்.
இந்தச் சூழலில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன் இரு நாட்டு உறவுகள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.