சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த திரு லீ குவான் இயூ சிங்கப்பூரை அதிவேக வளர்ச்சியடையச் செய்தவர் மட்டுமல்ல, சிங்கப்பூரில் இந்தியர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களைத் தூக்கிவிட்டவரும்கூட.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று மறைந்த திரு லீயின் 100வது பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி.
திரு லீயின் பிறந்தநாளையொட்டி இவர் சிங்கப்பூரில் இந்திய சமூகத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய பெரும்பங்கை ஆராய்கிறது தமிழ் முரசின் ‘லீ குவான் இயூ நூற்றாண்டு விழா’ காணொளித் தொகுப்பு.
சனிக்கிழமையன்று தமிழ் முரசு வெளியிட்ட இந்தத் தொகுப்பில் மூன்று காணொளிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு காணொளியும் ஆராயும் அம்சங்களைப் பார்க்கலாம்.
தமிழுக்குத் தந்த அங்கீகாரம்
சிங்கப்பூரின் அதிகாரத்துவ, அரசியல் மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழி விளங்குகிறது. தமிழுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்துள்ள ஓரிரு உலக நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
தமிழுக்கும் சிங்கப்பூருக்கும் இந்தப் பெருமை வந்துசேர அடித்தளத்தை அமைத்தவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ. சிங்கப்பூரில் வாழும் தமிழ் சமூகத்துக்கு அவர் அரணாகத் திகழ்ந்தார்.
அதே வேளையில் தமிழ், மலாய் அல்லது சீனம் ஆகிய மூன்றில் ஒன்றைப் படித்தால் மட்டும் போதாது, ஆங்கிலமும் முக்கியம் என்பதை மக்களுக்கு எடுத்தும் சொன்னார், இருமொழிக் கொள்கையைத் தோற்றுவித்தார்.
சிங்கப்பூரில் தமிழ்மொழியின் பயணம், இந்திய சமூகம் சந்தித்த சவால்கள், கல்விமுறையில் தமிழ் உள்ளிட்ட அம்சங்களை முதல் காணொளி ஆராய்கிறது. சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், 50, 60களில் திரு லீயுடன் அணுக்கமாகப் பணியாற்றிய மக்கள் என்று பல தரப்பினருடன் தமிழ் முரசு நடத்திய நேர்காணல்கள் இந்தக் காணொளியில் உள்ளன.
90 வயதைத் தாண்டிய முன்னாள் துறைமுக மேற்பார்வையாளரான திரு நம்மாழ்வார் விஜயரங்கனின் தனிப்பட்ட அனுபவங்களும் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரில் தமிழ்மொழியையும் தமிழர்களையும் மேம்படுட்ததுவதற்கு திரு லீ பொறுப்பேற்றுக்கொண்டதை விளக்குகிறது ‘லீ குவான் இயூ நூற்றாண்டு விழா’வின் முதல் காணொளி.
தஞ்சோங் பகாரில் லீ குவான் இயூ
சிங்கப்பூரின் முதல் பிரதமராகவும் பிரபல உலகத் தலைவர்களில் ஒருவராகவும் திரு லீ குவான் இயூ திகழ்ந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இவர் செயல்பட்ட விதம், இவரின் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆராய்கிறது இரண்டாம் காணொளி.
திரு லீ குவான் இயூ தமது அரசியல் வாழ்க்கை முழுவதும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
அந்தக் காலத்தில் பல இந்தியர்கள் தஞ்சோங் பகாரில் வசித்தனர். திரு லீயுடனான தங்களின் மறக்க முடியாத அனுபவங்களை அவர்கள் இக்காணொளியில் தெரியப்படுத்தினர்.
திரு லீ அத்தனை காலம் சிங்கப்பூரின் பிரதமராக இருந்ததற்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தவர்களில் தஞ்சோங் பகார்வாசிகளும் அடங்குவர். இது குறித்து அடித்தளத் தலைவர்கள், முன்னாள் துறைமுக ஊழியர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
தஞ்சோங் பகாரில் திரு லீயூடன் பணியாற்றிய தமது அனுபவங்களை இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா.
இன்று மத்திய வர்த்தக வட்டாரமாக உருவெடுத்திருக்கும் தஞ்சோங் பகார் வட்டாரத்தின் வரலாறு, அங்கு துறைமுக ஊழியர்களுக்கும் திரு லீ குவான் இயூவிற்கும் இடையே இருந்த பிணைப்பு ஆகியவற்றையும் தஞ்சோங் பகாரில் இந்தியர்களிடையே திரு லீக்கு இருந்த பேராதரவையும் இந்தக் காணொளி விவரிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு நல்ல தலைவராக மட்டுமின்றி சிறந்த மனிதராகவும் திரு லீ திகழ்ந்ததை ‘லீ குவான் இயூ நூற்றாண்டு விழா’வின் இரண்டாவது காணொளி எடுத்துரைக்கிறது.
லிட்டில் இந்தியா, பினக்கல்@டக்ஸ்டன்
அன்று தஞ்சோங் பகாரைப் போல் இன்று இந்தியர்கள் அதிகம் கூடும் பகுதியாக இருக்கிறது லிட்டில் இந்தியா.
இந்த வட்டாரம் முன்னேற்றம் காண்பதில் திரு லீ முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். லிட்டில் இந்தியாவின் ஒரு பகுதி, தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்குக்கீழ் வருகிறது.
சிறுபான்மையினராக இருந்தாலும் இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் என்றும் முக்கிய இடமுண்டு என்பதை ஆணித்தரமாகக் கூறும் நடவடிக்கைகளை திரு லீ மேற்கொண்டதை இந்தக் காணொளி விவரிக்கிறது.
அதோடு, திரு லீயின் காலத்தில் லிட்டில் இந்தியா வட்டாரம் மேம்பட்டது, அங்கு நவீன வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டது போன்றவையும் இக்காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திரு லீ கலந்துகொண்டு சிறப்பித்ததும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் ஆக உயரமான குடியிருப்புக் கட்டடங்களான பினக்கல்@டக்ஸ்டன், தஞ்சோங் பகார் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் பல இந்தியக் குடும்பங்கள் வேலை பார்த்து வசித்து வந்த இப்பகுதியில் பினக்கல்@டக்ஸ்டன் வீடுகள் அமைந்துள்ளன. புதிய குடியிருப்பாளர்கள் சிலருக்குக் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. அதை இந்தக் காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.
திரு லீ யாரையும் விட்டு வைக்கவில்லை; அனைவரையும் அரவணைக்கவேண்டும் என்ற அவரின் கொள்கையை இந்தக் காணொளியில் விளக்குகிறார் உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா. சண்முகம்.
அவர் உட்பட பல தரப்பினரின் அனுபவங்களை உங்கள் கண்முன் கொண்டு வருகிறது ‘லீ குவான் இயூ நூற்றாண்டு விழா’வின் மூன்றாவது காணொளி.
‘லீ குவான் இயூ நூற்றாண்டு விழா’ காணொளித் தொகுப்பை தமிழ் முரசின் இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்களில் நீங்கள் காணலாம்.