ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்த சிங்கப்பூரின் படகோட்ட வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். வியாழக்கிழமை இரவு இவர்களை வரவேற்க சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் கிட்டத்தட்ட 50 ரசிகர்கள் திரண்டனர்.
ரசிகர்கள் சிங்கப்பூரின் வெற்றியாளர்களுக்குப் பலத்த ஒலியுடன் ஆதரவளித்து வரவேற்றனர்.
சிங்கப்பூரின் படகோட்ட வீரர்கள் கழுத்தில் தாங்கள் வென்ற பதக்கங்களை அணிந்திருந்தனர். சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்றுவரும் இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் படகோட்டப் போட்டிகளில் சிங்கப்பூர் இரண்டு தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றை வென்றது.
2018ஆம் ஆண்டு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளின் படகோட்டப் போட்டிகளில் சிங்கப்பூர் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை மட்டுமே வென்றது.