திருவள்ளூர்: எகிப்தின் பிரமிட் கல்லறைகளிலிருந்து 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, எகிப்துடன் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பில் இருந்ததை உறுதி செய்வதாக இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் அவை ஆய்வுலகத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.
எகிப்தின் உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரியத் தளமான ‘கிங்ஸ் பள்ளத்தாக்கில்’ (Valley of the Kings) 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மொத்தம் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளிலும் உள்ளன. கி.பி. 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட அந்தக் கல்வெட்டுகள், ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகர் உள்ளிட்டோரின் பண்டைய வணிகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.
‘சிகை கொற்றன்’ என்ற தமிழரின் பெயர் ஐந்து வெவ்வேறு எகிப்து மன்னர்களின் பிரமிடுகளில், எட்டு இடங்களில் பதியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் “சிகை கொற்றன் - வர கண்ட” (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என உள்ளது.
ரோமானியக் காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல்வழி மட்டுமல்லாமல், எகிப்தின் உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்ததற்கான முதல் நேரடி ஆதாரமாக இது கருதப்படுகிறது.
“தமிழினம் கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம் என்பதனை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது” என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அந்தக் கண்டுபிடிப்பு குறித்துக் கூறியுள்ளார்.
உலக வணிக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை இது நினைவூட்டுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகமயமாக்கலை செயல்படுத்திய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மேலும் ஒரு சாட்சி என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வரலாற்றாசிரியர்கள் இந்தியப் பெருங்கடல் கடல் வணிக வரலாற்றை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் முக்கியத் திருப்புமுனையாக இக்கண்டுபிடிப்பை மதிப்பிடுகின்றனர். மேலும் விரிவான ஆய்வுகள் பண்டைய தமிழர்களின் உலகளாவிய தடம் பற்றிய பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை, தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை பிப்ரவரி 11 முதல் 14 வரை சென்னையில் ஏற்பாடு செய்திருந்த தமிழ் கல்வெட்டு பற்றிய அனைத்துலக மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் (Prof. Ingo Strach), பிரான்சின் பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் (Prof. Charlotte Schmidt) ஆகியோர் வெளியிட்டனர்.


