சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக. இதனால் தங்களுக்கு ஓர் இடம் ஒதுக்கப்படும் என நினைத்திருந்த தேமுதிக தலைமை ஏமாற்றம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆறு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. அந்த வகையில், காலியாக உள்ள 6 இடங்களில், திமுக 4 இடங்களையும் அதிமுக 2 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முன்பு செய்துகொண்ட உடன்பாட்டின்படி, தேமுதிகவுக்கு ஓரிடம் ஒதுக்கப்பட வேண்டும் என அக்கட்சித் தலைமை அதிமுகவிடம் வலியுறுத்தியது. ஆனால், அதிமுக தலைமை இன்பதுரை, தனபால் ஆகிய இருவரையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலின்போது தேமுதிகவிற்கு இடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் இம்முறை வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.