தமிழக ரயில் நிலையங்களில் குளிர்சாதனக் காத்திருப்பு அறைகள்

தமிழக ரயில் நிலையங்களில் குளிர்சாதனக் காத்திருப்பு அறைகள்

1 mins read
d0eccbfe-8a96-4145-9370-72253c1ff972
ரயில் நிலையங்களில் உள்ள குளிர்சாதனக் காத்திருப்பு அறை. - கோப்புப்படம்: சமயம் தமிழ்

சென்னை: தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கிவரும் நிலையில், வெய்யிலின் தாக்கம் குறித்த கவலை பொதுமக்களிடம் இப்போதே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ரயில் பயணிகள் வெய்யிலைச் சமாளிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 30 ரயில் நிலையங்களில் குளிர்சாதன காத்திருப்பு அறைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்றும் ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, ஸ்ரீரங்கம், காரைக்குடி, ராமேசுவரம், பழனி ஆகிய ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன.

அண்மையில் கரூர் ரயில் நிலையத்திலும் புதிய குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டு உள்ளது.

வசதியான பெரிய இருக்கைகள், தாய்ப்பாலூட்ட தனி அறை, இலவச இணையச்சேவை, சுத்தமான கழிப்பறை வசதி ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 24 மணிநேரமும் செயல்படும் குளிர்சாதன வசதியுள்ள பயணிகள் காத்திருப்பு அறைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்