சென்னை: அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், தமது எம்எல்ஏ பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) விலகினார்.
வரும் 22ஆம் தேதி நடைபெறும் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவில் விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும் தங்கள் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தனர்.
விஜயபாஸ்கரின் பதவிவிலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகச் சட்டமன்றத் தலைவர் அறிவித்துள்ளார்.
“தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவினால், நான் உயிராய் நேசித்த இயக்கத்திலிருந்து விடைபெறுகிறேன். என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்,’’ என விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா பனையூரில் நடைபெற உள்ளது. அப்போது தவெகவில் விஜயபாஸ்கர் இணைவார் எனக் கூறப்படுகிறது.
விஜயபாஸ்கரின் பதவி விலகலைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 42ஆகக் குறைந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

