சென்னை: சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோமீட்டரிலிருந்து 5,904 சதுர கிலோமீட்டராக விரிவாக்கம் பெறுகிறது. 47 ஆண்டுகளுக்குப் பிறகான இந்த விரிவாக்கத்தில் சென்னை அதிநவீன உள்கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட உள்ளது.
இதற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் மரியா வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான வரவுசெலவு அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையின் அரக்கோணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கூடுதல் 4,715 சதுர கிலோமீட்டர் பரப்பு இணைக்கப்படுகிறது.
புதிய விரிவாக்கத்தின்கீழ் 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1,225 கிராமங்கள் அடங்குகின்றன. இதன்மூலம் பெருநகரச் சென்னையின் மக்கள்தொகை ஏறத்தாழ 1.59 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக, பரப்பளவில் நாட்டின் மூன்றாவது பெரிய பெருநகரப் பகுதியாகச் சென்னை உருவெடுத்துள்ளது. தலைநகர் டெல்லி, மும்பையைவிடச் சென்னையின் பரப்பளவு அதிகமாகிறது.
கூவம், அடையாறு நதிகளை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு அனைத்துலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவார்ந்த போக்குவரத்து, பசுமைத் திட்டங்களுடன் அந்நகரம் விரைவில் புதுப்பொலிவு பெறவுள்ளது.


