சென்னை: சமூக ஊடகங்களில் சிறு காணொளிகளை வெளியிட்டு பிரபலமடைந்த இரண்டு சிறுவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இருவரும் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா ஆகிய இருவரும் இன்ஸ்டகிராமில் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி தொடர்ந்து காணொளி வெளியிட்டு வருகின்றனர். இவர்களை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.
கலகலப்பான பேச்சு, நல்ல அறிவுரைகள், கல்வியின் மேன்மையை விவரிக்கும் உரையாடல்கள் மூலம் இருவரும் குறுகிய காலத்தில் பிரபலமாகி உள்ளனர்.
கல்வியை மட்டும் விடவே விடாதீர்கள் என்று சிறுவர்கள் கூறும் ஒற்றை வாக்கியமும் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், சிறுவர்கள் இருவரையும் நேரில் வரவழைத்த தமிழக முதல்வர், புத்தகங்களைப் பரிசளித்து அவர்களுடைய குடும்பம் மற்றும் கல்விநிலை குறித்து கேட்டறிந்தார்.
இருவரும் வெளியிடும் காணொளிகள் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டியதுடன், படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட காணொளியும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

