கும்பகோணம்: தவெக ஆலோசனைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட திடீர்க் கைகலப்பு காரணமாக பாபநாசம் பகுதியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கைகலப்பின்போது காயமடைந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாபநாசம் வட்டம் மருத்துவகுடியில் தவெக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியின் தவெக கிளைச் செயலாளர் பதவி தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ஆதனூர், மருத்துவகுடி, நாககுடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தவெகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது 40 வயதான க. விஜய் என்பவர், தாம் நீண்டகாலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வருவதால் தமக்கு கிளைச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால், மாற்று கட்சியில் இருந்து அண்மையில் தவெகவில் இணைந்த விஜயகாந்த் என்பவர், தனக்குத்தான் கிளைச் செயலாளர் பதவியை வழங்க வேண்டும் எனக் குரல் எழுப்பினார். இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் மூண்டு இறுதியில் கைகலப்பில் முடிந்தது.
இதில் காயமடைந்த ஆறு பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பாபநாசம் காவல்துறையினர் இந்த மோதல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தவெகவில் விஜய், விஜய்காந்த் இடையேயான இந்த மோதல் அக்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


