திண்டுக்கல்: விருதுநகா், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் கூம்பு வடிவம், நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் மூலம் வெம்பக்கோட்டைக்கும் வட மாநிலங்களுக்குமான வணிகத் தொடர்பு உறுதியாவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
“சூது பவளமணி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் வடமாநிலமான ராஜஸ்தான் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இது வட மாநிலங்களுக்கான வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது,” என்று அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறினார்.
இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.