சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் ‘விசில்’ தவெகவை எதிர்கொள்வதற்காக ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து திமுக வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களம் கண்ட சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’, அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதன் வாக்கு வங்கியும் 8லிருந்து 4 விழுக்காட்டுக்குச் சரிந்தது. காரைக்குடியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் வைப்புத் தொகையை இழந்து நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில், இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதி பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனால் திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைத்தேர்தலில் தவெக கூட்டணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக, ஆளுங்கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுவேட்பாளர்களை நிறுத்த ஆலோசித்து வருவதாக ‘இந்து தமிழ் திசை’ தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் பணிகளை அக்கட்சி தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் வென்ற இசக்கி சுப்பையா, இரண்டாம் இடம்பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த தவெக வேட்பாளர் என மூவருமே தற்போது தவெக அணியில் உள்ளனர்.
இத்தொகுதியில் நாடார் சமூகத்தினர் கணிசமாக வசிப்பதைக் கணக்கில் கொண்டு, அதே சமூகத்தைச் சேர்ந்த சீமானை பொதுவேட்பாளராக நிறுத்த திமுக காய் நகர்த்துகிறது.
சீமானை சம்மதிக்க வைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடமும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அம்பாசமுத்திரத்தில் சீமானை வெற்றி பெறச்செய்து சட்டப்பேரவைக்குள் அனுப்பினால், அது முதல்வர் விஜய்க்கும் தவெகவுக்கும் சட்டசபையில் கடுமையான அரசியல் நெருக்கடியை கொடுக்கும் எனவும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் மேலும் வலுப்பெறும் எனவும் திமுக கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை திமுக உறுதிப்படுத்தவில்லை.

