சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்துள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூன் 17) தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பின்னர், அவர்கள் நால்வரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளைவிட்டு விலகி தவெகவில் இணைந்தனர்.
இதற்கு முன்னதாக, அதிமுக கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததாக இவர்கள் நால்வர் மீதும் அதிமுக தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், இவர்களின் பதவி விலகலை ஏற்பதாகச் சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் பதவிவிலகியதால் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இடைத்தேர்தல் குறித்து அறிவிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும், நான்கு எம்எல்ஏக்கள் பதவி விலகலை ஏற்றுக்கொண்டது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் ஜேசிடி பிரபாகருக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

