மதுரை: புனைவு வரலாற்றைத் தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும் என்று இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியுள்ளார்.
வரலாற்றை புனைவுகளோடு கட்டமைக்கலாம். அதைத் தொல்லியல் சான்றாகக் கட்டமைக்க முடியாது. புனைவுகள் வரலாறு ஆகாது. தமிழகத்தின் பல அகழாய்வு குறிப்புகள் மக்களுக்குச் சென்று சேர்ந்தால்தான் வரலாற்றின் உண்மைத்தன்மை புரியும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் மதுரையில் சனிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவுக் கருத்தரங்கத்தில் அவர் பேசினார்.
“தற்போது நாகரிகம் பற்றிய புனைவுக் கதைகளைத்தான் வரலாறாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆதாரங்கள் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதுதான் வரலாறு.
“கீழடி அகழாய்வு குறித்து இன்னும் முழு அறிக்கை அளிக்கப்படவில்லை. அதற்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மணலூர் கீழடியை மகாபாரதத்துடன் தொடர்புபடுத்தி புனைவு நூலாக்கியுள்ளனர்,” என்றார் அவர்.
“காஞ்சிபுரத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 1975-82-ம் ஆண்டுவரை 7 ஆண்டுகள் அகழாய்வு செய்த அறிக்கையை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. தமிழகம் முழுவதும் கிடைத்த கறுப்பு சிவப்பு நிற பானை ஓடு காஞ்சிபுரத்தில் மட்டும் கிடைக்காதது முக்கிய செய்தி. அதற்குக் காரணம் காஞ்சிபுரம் சங்க கால நகரம் கிடையாது. மக்களுக்கு தெரியப்படுத்தியத்தால்தான் கீழடி வாழ்ந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் பற்றிய அறிக்கை வந்திருந்தால் வரலாற்றுப் பார்வை மாறியிருக்கும். மொழியைக் காப்பாற்றி வாழ்பவர்கள் தமிழர்கள். இன்றுவரை சங்க இலக்கியங்களை தொல்லியல் எச்சங்களோடு ஒப்பிடவில்லை,” என்றார் அவர்.