சென்னை: சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் நான்காவது சென்னை மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ளது.
ஊட்டி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தனித்துவமான மலர்கள் கொண்டுவரப்பட்டு கண்காட்சியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பறவைகள், செல்லப் பிராணிகளின் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை செம்மொழிப் பூங்கா, 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு 700 வகையான தாவரங்கள், பல அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மக்களைக் கவரும் வகையில் 2022ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர்க் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்களின் வளத்தையும், வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் நோக்கில் கடந்த மூன்று மலர்க் காட்சிகளும் நடத்தப்பட்டன.
இக்காட்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். கடந்த மூன்று கண்காட்சிகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து இந்த முறை, முன்பு நடந்த மலர்க்கண்காட்சிகளைக் காட்டிலும் அதிகமான மலர்களைக் கொண்டு மலர்க்கண்காட்சி அலங்கரிக்கப்பட்டுள்ளது.