சேலம்: தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் முன்னாள் எம்எல்ஏக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கட்சி மாறி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்த நிலையில் திமுகவில் இருந்த பாமக முன்னாள் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிமுகவில் சேர்ந்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இளையகண்ணு, 58, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்துவந்தார்.
இவர், அக்கட்சியிலிருந்து விலகி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேலவை எம்.பி., சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.
இதுகுறித்து இளையகண்ணு கூறுகையில், “அதிமுகவில் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக செயல்படும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது பலரும் அதிருப்தியில் உள்ளனர்,’’ என்றார்.
இதற்கிடையே சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ தமிழரசு, 65, கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்திருந்தார்.
இவர், திமுகவிலிருந்து விலகி, தன் ஆதரவாளர்களுடன் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் ஐக்கியமானார்.
இதுபற்றிப் பேசிய தமிழரசு, “ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் 2019ல் இணைந்தேன். எனக்கும் ஆதரவாளர்களுக்கும் உரிய மரியாதை தராததால் அதிமுகவில் இணைந்துள்ளேன்,’’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஓமலூரில் தமிழரசு அளித்த பேட்டியில், “பன்னீர்செல்வம் போன்றோருக்கு திமுகவில் என்னைவிட மோசமான நிலை ஏற்படும். மாற்றுக் கட்சியிலிருந்து சேர்ந்த என்னைப் போன்ற ஏழை, எளியோருக்கு ஸ்டாலினிடத்தில் இடம் கிடையாது,’’ என்றார்.

