புதுக்கோட்டை: விராலிமலை அருகே கொடும்பாளூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது, தங்கக் குண்டுமணி கண்டெடுக்கப்பட்டது.
தமிழகத்தின் கீழடி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழாய்வின்போது ஏராளமான, அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, தொல்லியல் ஆய்வுக்காக தமிழக அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பாக, ஆறு இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமையன்று, ஆறாவது குழியில், தங்கத்தால் செய்யப்பட்ட குண்டுமணி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேலும், அதன் அருகே மண் பானைகள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
ஏற்கெனவே, இப்பகுதியில் ஏறக்குறைய நான்கு அடி ஆழத்தில் செங்கல் சுவர் கட்டுமானம் தென்பட்டது.
மேலும், தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல், கூர் வடிவிலான எலும்புகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன.