சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். அதேசமயம் சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்வது பொதுமக்களுக்கு ஆறுதலாக அமையும்.
இந்நிலையில், நடப்பாண்டு வடக்கு, கடலோரத் தமிழகத்தின் சில பகுதிகளிலும் உள் தமிழ்நாட்டிலும் வழக்கத்தைவிட அதிகப்படியான வெப்ப அலை வீசும் வாய்ப்பு உள்ளது என்றும் இதன் காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மேல் மாநிலம் முழுவதும் பகலில் அதிகபட்ச, இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் கடுமையாக இருக்கக்கூடும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

