சென்னை: அதிமுக தற்போது பலவீனமாக உள்ளது என்றும் அதை மாற்றுவதுதான் தன் வேலை என்றும் சசிகலா கூறியுள்ளார்.
தனது 71ஆவது பிறந்தநாளையொட்டி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை அவர் சந்தித்து இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அதிமுகவில் நிலவும் சிக்கலைப் புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது என்றும் அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் கூறினார்.
“விளம்பரத்தால் திமுக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைக்கிறது. நான் அதனை ஆட்சிக்கு வரவிட மாட்டேன். நான் கடந்த 39 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை அறிந்தவளாக இருக்கிறேன். இன்று மக்களைப் பார்க்கவே எனக்கு வருத்தமாக உள்ளது.
“பலவீனமாக உள்ள அதிமுகவை மாற்றாவிட்டால் தமிழக மக்களுக்கு அதிக சிரமம் ஏற்படும்.
“மத்திய அரசைத் திட்டுவதும் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுவதும்தான் திமுக அரசின் வேலையாக உள்ளது. 2026ல் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சி வரும். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.
“ஜெயலலிதா ஒரு நாளும் ‘ரோட் ஷோ’ என்ற பெயரில் பயணம் மேற்கொண்டதில்லை. அது முதல்வரின் வேலையும் அல்ல. முதல்வர் என்பவர் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும், உட்கார்ந்து வேலை பார்க்கவேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார் சசிகலா.