சென்னை: ‘எஸ்ஐஆர்’ என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்தால் இரட்டை இலையை பறிபோய்விடும் என்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் எனத் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் திட்டம் சரியில்லாத திட்டம் என்றார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, நாங்கள் பாஜகவை ஆதரிப்போம் என்று கூறும் ஒரே இயக்கம் அதிமுக தான்.
இது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். இதை எல்லாம் மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று, காலில் விழுவது, இன்னொன்று, அடுத்தவர் காலை வாரி விடுவது. தமிழ்நாட்டை காப்பாற்றப் போவதாகச் சொல்லி பேருந்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோதே சொன்னேன்.
போகப்போக ஒவ்வொருவராக இறங்கிவிடுவார்கள். கடைசியில் நீங்களும் ஓட்டுநரும்தான் இருப்பீர்கள் என்று. அதுதான் இன்றைக்கு நடக்கிறது. ஒரு நாள், பழனிசாமியை நீக்கி விட்டதாக அவரே அறிக்கை விடலாம்.
அதிமுக-வை கரகாட்டக்காரன் கார் போல ஆக்கிவிட்டார் பழனிசாமி. ஆக்சிடென்ட் ஆன கார் மாதிரித்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை உள்ளது.
சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை எல்லாம் திமுகவின் பி டீம் எனச் சொல்லிவிட்டார் பழனிசாமி. நான் சொல்கிறேன், தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை திமுக-வுக்கு பி டீமும் தேவையில்லை, சி டீமும் தேவையில்லை” என்று கூறியுள்ளார் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பீகார் தேர்தல் பிரசாரத்தில் சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகிறார். தமிழ்நாட்டில் பீகார் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை; அங்கே அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று பேசுகிறார். தான் இந்திய ஒன்றியத்துக்கே பிரதமர் என்பதை மறந்து மக்களுக்குள், மாநிலங்களுக்குள் சண்டையை மூட்டிவிட முயற்சிக்கிறார்.
இப்படித்தான் ஒடிசா தேர்தலின்போது, கோயில் சாவியைத் திருடிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து விட்டனர் என்று சொன்னார்.
பிரதமரின் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தார். இதற்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது உண்மையான அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க.வின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க அவகாசம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

