சென்னை: உயர் ரக கஞ்சாவைக் கடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில் மலேசியர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது பயணப்பையில் ஏறக்குறைய நான்கு கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்து அவர் இந்தியாவுக்குள் கடத்தி வந்ததாகச் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கோள்காட்டி ‘ஹரியான் மெட்ரோ’ செய்தி வெளியிட்டுள்ளது.
கைதான அந்த மலேசியர், பேங்காங்கில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற விமானத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி பயணம் செய்துள்ளார்.
சென்னையில் விமானம் தரையிறங்கியதும் சுங்கத்துறைச் சோதனைக்கான எந்தப் பொருளும் தம்மிடம் இல்லை என்பதை வெளிக்காட்டும் வகையில் அவர் வெளியேற முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த விமானப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.
அதில் அவரது பயணப்பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நான்கு பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
பச்சை நிறத்திலான பொருள்கள் கொண்ட அந்த நான்கு பொட்டலங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் இருப்பது உயர் ரக கஞ்சா என்பது உறுதியானதாக இந்திய ஊடகத் தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
‘ஹைட்ரோபோனிக்’ எனப்படும் உயர் ரக கஞ்சா மண் இன்றி ஊட்டச்சத்து நிறைந்த நீரைப் பயன்படுத்திப் பொதுவாக கட்டுப்படுத்தப்பட்ட வெளிச்சம், வெப்பநிலை, ஈரப்பதத்தின் கீழ் வீட்டிற்குள் வளர்க்கப்படுகிறது.


