சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடி மையத்தைச் சேர்ந்த குழுவினர், மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை உருவாக்கி உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள், போரில் காயமடைந்து நடக்க முடியாத ராணுவத்தினர் ஆகியோர் இந்த சக்கர நாற்காலியை எளிதில் பயன்படுத்த இயலும். சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினர் இதை வடிவமைத்துள்ளனர். ‘டிரிம்பிள்’ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் இதற்கான ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டது.
‘ஒய் டி ஒன்’ எனக் குறிப்பிடப்படும் இந்த நவீன சக்கர நாற்காலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்திய ராணுவ மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம், நவீன நாற்காலியை அறிமுகப்படுத்திய பின்னர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள், போரில் கால்கள் பாதிக்கப்பட்ட ராணுவத்தினர் உள்ளிட்டோர் இந்த நவீன சக்கர நாற்காலியால் பயனடைவர் என்றார்.
“ஐஐடியில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக கிராமப்புற மக்கள், தொலைதூர பகுதியில் வசிப்போருக்கு பயன்பட வேண்டும்,” என்றும் திரு அனுபம் கேட்டுக்கொண்டார்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், சக்கர நாற்காலிகளின் எடை பொதுவாக 17 கிலோ அளவில் இருக்கும் என்பதால் பயனாளிகள் சற்று சிரமப்படுவர் என்றும் ஐஐடி உருவாக்கியுள்ள சக்கர நாற்காலியின் எடை 8.5 கிலோ மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“குறைந்த எடையில், உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உறுதியானது, பாதுகாப்பானது. இதுபோன்ற சக்கர நாற்காலிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ரூ.2.40 லட்சம் செலவாகும். ஆனால், ஐஐடியின் சக்கர நாற்காலி ரூ.75 ஆயிரத்துக்கு கிடைக்கும்,” என்றார் திரு காமகோடி.
ஐஐடி துளிர் நிறுவனமான ‘த்ரைவ் மொபிலிட்டி’ நிறுவனம் இந்த சக்கர நாற்காலிகளை வணிக ரீதியில் தயாரிக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.