நத்தம்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலையடிவார கிராமமான ஆவிச்சிபட்டி என்னும் சிற்றூரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. சனிக்கிழமை இரவு அங்கு சிவகாசியைச் சேர்ந்த இருவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து நிகழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் அந்த இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் காவல்துறை அதிகாரிகள் அதிகாலையில் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்து போனவர்களின் உடல்களைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவாகி விட்டார். நத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர்கின்றனர்.


