ஊட்டி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் தற்போது சமவெளிக்கு இணையாக கடந்த சில நாட்களாக அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 29 டிகிரி செல்சியஸ்வரை காணப்படுகிறது.
அங்கு இதமான காலநிலையை எதிர்பார்த்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
ஊட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்தாலும், மாலை, இரவு நேரங்களில் 14- 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து சற்றே குளிர்ச்சியான நிலை உள்ளது.
கோடைக் காலத்தை முன்னிட்டு இடம்பெறும் மலர்க்காட்சிகள், குளிர்ந்த காலநிலையை மையமாகக் கொண்டவை என்பதால் வெப்பநிலை உயர்வால் மலர்ச்செடிகள் வாடிவிடும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுலாத் துறையினரும் வியாபாரிகளும் கவலை அடைந்து உள்ளனர்.
ஊட்டியின் வெப்பநிலை உயர்வுக்கு மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவது, கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் கட்டடங்கள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை காரணமாக உள்ளன. கடந்த ஈராண்டுகளாக கோடைமழைம் குறைந்து காணப்படுகிறது.
எல்நினோ போன்ற இயற்கை காலநிலை நிகழ்வுகளும் ஊட்டியின் வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், அங்கு நிலவும் பருவநிலை மேலும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் துறைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று வானிலை வல்லுநர்கள் கூறி உள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் ஈரோடு, கோவை உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வுபாதை நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் வருகிற 20ஆம் தேதி வரை லோன மழை பெய்யக்கூடும். எனினும் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வருகிற 18ஆம் தேதி வரை உயரக்கூடும் என்று அது குறிப்பிட்டது.

