சென்னை: சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது தவெக தலைவர் விஜய்யின் பேச்சு குழந்தைகளுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
அக்கட்சியின் கோவை மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன், காவல் ஆணையாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அவர் தமது ஐந்து வயது மகன் விஜய்க்கு வாக்களிக்கக் கோரி அடம் பிடித்ததுடன் உணவு உட்கொள்ள மறுத்ததாகவும் இதனால் தாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதையடுத்துக் குழந்தைகளை அடம்பிடிக்கச் சொல்லி வாக்கு சேகரித்ததாக விஜய்மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட விஜய், சென்னையில் இம்மாதம் (ஏப்ரல்) 21ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது வாக்காளர்கள், தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அடம்பிடித்துத் தமக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுவே தற்போது சர்ச்சையாகி உள்ளது.
தனது மகனைப் போலவே மேலும் பல குழந்தைகளும் உளவியல் சிக்கல்களைச் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார் பாலகிருஷ்ணன்.
எனவே, விஜய்மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர் பேசிய காணொளிக் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

