சேலம்: தேர்தல் பிரசாரத்தின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உட்கட்சிப் பூசல் காரணமாக பாமக பிளவுபட்டுள்ளது. அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், புதுக் கட்சி தொடங்கியுள்ள சசிகலாவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார் ராமதாஸ்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) சேலம் மேற்குத் தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பேசி முடித்ததும் அவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டது. எதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் பதறிப்போன நிலையில், உடனடியாக அவரை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வாரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், தகவல் கேள்விப்பட்ட அன்புமணி, “டாக்டர் ராமதாசுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவரைச் சுற்றியிருப்பவர்களைச் சும்மா விடமாட்டேன்,” என்று எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

