திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்ரல் 1) காலை, தனது நடைப்பயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி நட்சத்திர தங்குவிடுதியில் தங்கிய அவர், காலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவார் எனத் தகவல் வெளியாகியது.
எனவே, அமைச்சர் நேரு அல்லது அன்பில் மகேஸ் ஆகியோர் போட்டியிடும் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் பிரசாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, காந்தி சந்தைப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
காந்தி சந்தையில் தரைக்கடை வைத்துள்ள பெண்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அவர், அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், அருகில் இருந்த தேநீர்க் கடைக்குச் சென்ற அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அமைச்சர் நேரு, நிர்வாகிகளுடன் தேநீர் அருந்தினார்.
இதையடுத்து, மேலும் சில இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் தாம் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு திரும்பினார்.
புதன்கிழமை காலை அவர் வாக்குச் சேகரித்த பகுதி, தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்குப் பகுதியாகும். அங்கு திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, சென்னை முதல்வர் ஸ்டாலினுடைய தொகுதியான கொளத்தூரில் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு விதிமுறைகளை மீறி பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவானது.

