தஞ்சை: மேகதாது அணை விவகாரம் தொடர்பில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தர் தமிழகத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக காவிரி உரிமை மீட்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தஞ்சையில் அந்த அமைப்பினர் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தரின் உருவப் பொம்மையை எரித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதாகவும் அதற்கு மத்திய அரசு துணை போவதாகவும் சாடினார்.
இந்தப் பிரச்சினையை தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அவர், மேகதாது அணையை கர்நாடகா கட்டலாம் என்ற தீர்மானத்தை காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் நிறைவேற்றியுள்ளதை ஏற்கவே இயலாது என்றார்.
“காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டு இருந்தால் அதில் பங்கேற்காமல் தமிழக அரசுப் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்வது வழக்கம்.
“இதன் மூலம் மேகதாது குறித்து விவாதம் எதுவும் நடைபெறாமல் தமிழக அரசு தடுத்து வந்தது. ஆனால் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் கலந்து கொண்டார்.
“அச்சமயத்தில்தான் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டலாம் என்ற தீர்மானத்தை மேலாண்மை ஆணையத் தலைவர் நிறைவேற்றியுள்ளார். தமிழக அரசுப் பிரதிநிதி அந்தக் கூட்டத்தில் ஏன் பங்கேற்றார் என்பது குறித்து இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை,” என்றார் மணியரசன்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரை நான்கு மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிப்பது மட்டும்தான் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் என்று சுட்டிக்காட்டிய அவர், புதிய அணையைக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு இல்லை என்றார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்காது என்று தெரிவித்த பெ. மணியரசன், காவிரி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து எஸ்.கே.ஹல்தரை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“மேகதாது அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடைய போராட்டம் நீடிக்கும்,” என மணியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.