தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி, தமிழ் மொழியை நவீனப்படுத்த ரூ.5 கோடி, 8 இடங்களில் அகழ்வாய்வு

மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு

2 mins read
4ed4ea63-1754-4d70-973a-ee3b91097a6c
சட்டமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. திங்கட்கிழமை 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது வரவுசெலவுத் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்கும், அகழ்வாராய்ச்சிக்கும் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில், அவற்றை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

மேலும், உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இவ்வாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்களை தமிழில் வெளியிடும்.

தொழில்நுட்பப் பரப்பில் தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கைமொழிச் செயலாக்கம், பெருந்திரள் மொழி மாதிரிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்திட இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பேசப்படும் சௌராஷ்டிரா, படுக மொழிகளையும் தோடர், கோத்தர், சோளகர், காணி, நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களிலும் அகழ்வாய்வு

தமிழரின் நீண்ட நெடிய பண்பாட்டு மரபினை மொழி வரலாறு, அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்களின் துணைகொண்டு, சான்றுகளின் அடிப்படையில் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில், உறுதியாக நிறுவிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் 2024-25ல் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை கீழ்நமண்டி, திருமலாபுரம், கொங்கல்நகரம், மருங்கூர், சென்னானூர் ஆகிய எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், கேரளாவிலுள்ள முசிறி (பட்டணம்), ஒடிசாவிலுள்ள பாலூர், ஆந்திராவிலுள்ள வெங்கி, கர்நாடகத்திலுள்ள மஸ்கி ஆகிய இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த அகழ்வாராய்ச்சிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும். சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும். அகழாய்வுக்கு அதிகபட்ச தொகை ஒதுக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வரவுசெலவுத் திட்ட உரையில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்