சென்னை: தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.
வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்ட நிலையில், முக்கியக் கட்சிகள் தங்களது கூட்டணிகளையும் போட்டியிடும் தொகுதிகளையும் முடிவுசெய்து வருகின்றன.
அதிமுக கூட்டணியிலும் திமுக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது பாஜக கூட்டணியும் இறுதிசெய்யப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் பாஜக இம்முறை பாதி தொகுதிகளில், அதாவது 20 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமையன்று (மார்ச் 21) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தென்மாநிலங்களில் கர்நாடகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் வலுவாகக் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக, இம்முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடும், அதாவது பாதிக்குப் பாதி தொகுதிகளைத் தன்வசமாக்க நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதனுடன் இணைந்து போட்டியிடுவதும் ஒரு காரணம்.
பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏற்கெனவே பத்துத் தொகுதிகளும் அமமுகவிற்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரசுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜக சின்னத்தில் நான்கு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவையே அந்தக் கட்சிகள்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து பிரிந்து செயல்படும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பாஜக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கூட்டணியில் அதுகுறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டதற்கு, “முன்னாள் முதல்வர் விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. அது தொடர்பாக நான் கூறுவது சரியாது இராது,” என்று பதிலுரைத்தார்.
மேலும், 24 வேட்பாளர்கள் பட்டியலுடன் வியாழக்கிழமை மாலையே டெல்லி செல்லவிருப்பதாகக் கூறிய அவர், வேட்பாளர் பட்டியல் எந்நேரமும் வெளியாகலாம் என்றும் சொன்னார்.