சென்னை: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகப் பெண் காவலர்களையும் அவர்களது மூத்த அதிகாரிகளையும் அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகியான பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஜெரால்டு, பிணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நெடுநாட்கள் என்னைச் சிறையில் அடைப்பதற்காக வேண்டுமென்றே, ஒரே சம்பவம் தொடர்பாக என் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.
பிணையில் விடுவித்தால், சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைக்கும் முயற்சியில் நான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என்றும் அதனால் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச் செல்வி, “யார் பேட்டி கொடுத்தாலும் அதில் அவதூறு கருத்துகள் இருப்பின், அதை நீக்கிவிட்டுத்தானே வெளியிட வேண்டும். சர்ச்சைக்குரிய வகையிலான அந்தப் பேட்டியில் மனுதாரரின் கேள்வியில் உள்நோக்கம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. பிரச்சினையைத் தூண்டும் வகையில், ஜெரால்டினின் கேள்வி உள்ளது. கல்வியறிவு உள்ள அவர், பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பிணை மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்,” என உத்தரவிட்டார்.

