சென்னை: தமக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக இளையரணியின் 45வது ஆண்டுத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமக்கு எவ்வளவு பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும் இளையரணிச் செயலாளர் என்ற பொறுப்பே மனதுக்கு நெருக்கமானதாக நீடிக்கும் என்றார்.
திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது இந்த வதந்திகள் அதிகமாக வலம்வந்தன.
இந்நிலையில், இந்தத் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என்று குறிப்பிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்.
“எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்,” என்றார் உதயநிதி.

