நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீரோடைகள் பல நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆட்சியர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழையின்போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கனமழை பெய்யும்போது நிலச்சரிவு, மரங்கள் விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்போது அத்தியாவசியப் பணிகளைத் தவிர, தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனமழை காரணமாக மூடப்பட்டுள்ள முதுமலைக் காப்பகம் ஜூலை 23ஆம் தேதி திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை தொடர்ந்ததால் அக்காப்பகம் மூடப்படுவது நீட்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கூறுகையில், “தமிழ்நாடு வானிலை ஆய்வு நிலைய அறிக்கையின்படி நீலகிரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்றார்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைசார்ந்த பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்றும் அது ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

