காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்த ஆணையர் செந்தில்முருகன், “தீர்மானம் வெற்றிபெறவில்லை” என்று சொல்லி கூட்டத்தை முடித்துக்கொண்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி பதவியேற்றதில் இருந்தே பிரச்சினைகளை எதிர்கொண்டார். கடந்த சில மாதங்களாக கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது. திமுக கவுன்சிலர்களே மகாலட்சுமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
மோதல் வலுத்து வந்த நிலையில் கணக்குக் குழு, நிதிக் குழு உட்பட பல்வேறு நிலைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியைத் துறந்தனர். அவர்களை சமாதானப்படுத்த திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்த பலகட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என 33 கவுன்சிலர்கள் அணி சேர்ந்து மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர்.
திங்கட்கிழமை (ஜூலை 29) காலை காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் வாக்கெடுப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு 35வது வார்டு திமுக உறுப்பினர் பிரவீன்குமார் மட்டுமே வந்திருந்தார். அவரும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 41 கவுன்சிலர்கள் வாக்களித்தால் மட்டுமே தீர்மானம் வெற்றிபெறும்.
திமுக தலைமையில் உள்ள முக்கிய நிர்வாகிகள் திமுக கவுன்சிலர்களை அழைத்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட உறுப்பினர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்பது புதிராக உள்ளது.